Monday, August 2, 2010

செவத்தவளே..




செவத்தவளே
என் செவத்தவளே
என்ன சிரிச்சே
செயிச்சவளே..

என் கண்ணுல
மெதுவா தடுக்குனதால
நெஞ்சுல
விழுந்தவளே..

நீ
ஓரமாப் பாத்ததெல்லாம்
காரமாப் பாத்ததெல்லாம்
வேகமா புத்தியில் போயி
மத்தியில் நின்னு
பொதஞ்சதடி..

ஓன் ஈர உதட்டில்
குடிவர
ஏன் பேருக் கென்னைக்கு
யோகமோ..

அந்த நாளத் தேடி
நூலாப் போறேன்..

செவத்தவளே - என்
செவத்தவளே

காட்டு வெள்ளம் - அது
ஓடி வந்தா
எந்தப் பாதையும்
பாப்பது இல்ல..

ஏன் பாட்டு வெள்ளம் - அது
அது ஓடிவர
ஓன் பார்வையத்
தேடுது புள்ள..

செவத்தவளே - என்
செவத்தவளே

ஒரச்ச மழ
பேயையில
வெரச்ச மண்ணு
கரைவதப் போல

நீ சிரிச்சுக்கிட்டே
பாத்ததுல
உசுர் அரிச்சுக்கிட்டு
போயிருச்சே..

மொளச்ச வெத
பூமிக்குள்ள
தொளச்சுக்கிட்டு
வாரதப் போல

வெடிச்சுருச்சு
ஓன்னெனப்பு
மூளையோட
முடிச்சுக்குள்ள..

போகாதுன்னு
நெனச்ச
ஏம்மனச
நீ கைப்பிடிச்சு
கூட்டிப் போயிட்ட..

வேணாமுன்னு
கெடந்த
உயிர்க் கொழுந்த
நீ மய்ய வச்சு
மயக்கிப்புட்ட..

தீராமக் கெடந்த
ஏந்திமிரில
நீ
தீய வச்சுப்புட்ட..

காப்பாத்துன்னு
நான்
கதற
நீ
கைய்ய விரிச்சுப்புட்ட..

- அரவிந்த் குமார்.பா


காதல் சொல்ல வந்தாள்

நீதானா
என் பெயர் சொல்லி
அழைத்தவள்.
என் உயிர்க்குள்ளே
நிலைத்தவள்.

நலம்தானா
என் சுகம் சரிக்கும்
உன் கண்கள்
என் அகம் பெயர்த்த
உன் இதழ்கள்.

இப்போதுதானா
கிடைத்தது
நேரம்..
இன்றுதானா
விடை பெற்ற துன்
நாணம்..

படபடவெனப்
பேசும் மொழி
எங்கே..

தடதடவென
ஓடும் கால்கள்
எங்கே..

முதன்முதல் வந்த
காதலதைச் சொல்ல
அத்தனையும் இன்று
அடமானம் வைத்தாயோ..

மெதுமெதுவாய்
காதல் சொன்ன பிறகு..
துறுதுறுவெனத்
துளிர்க்குமோ சிறகு..

சரசரவென
இழந்தவை யத்தனையும்
அப்புறமாய் வட்டியுடன்
மீட்பாயோ..

தனியே வந்தபின்
ஏனடி
தள்ளி நிற்கிறாய்..

கவிதை நேரமிது
பிறகேன்
கண்ணீர் வடிக்கிறாய்..

கவலை
பேச வேண்டாம்..
வா..
நிறையக் காதலைப்
பேசுவோம்..

காத்திருக்கிறது
வெளியே
இயற்கை -
வா.. அதனிடம்
வாழ்த்துக்கள் வாங்குவோம்..

- அரவிந்த் குமார்.பா

பச்சைப் பசுங்குயில்

பச்சைப் பசுங்குயில்
இச்சைக் கருங்குயில்
இப்போது இல்லை என் பக்கம்..

எங்கள் சிறகுகள்
உரசிய சிருங்கார மேகங்கள்
என்னை கேலி செய்து
சிரிக்குது நித்தம்..

கரையில் நடந்தேன்
அலையோடு
ஆறுதல் கிடைக்க..

மழையில் நனைந்தேன்
அழும் போது
கண்ணீரை மறைக்க..

கலைந்து போனது
கனவெல்லாம்..
சிலுவை யானது
நினைவெ ல்லாம்..
மறந்து போக
முயற்சி செய்தேன்
மறதியின் குருதியைக்
குடித்து விட்டாள்..

ஒரு நொடியில்
காதல் கலைந்து போனதும்
என் செடியின்
இலைகள் காய்ந்து போனது..
இன்னொரு மழையில்
துளிர்க்க நினைத்தேன்
சருகாய் இருந்தும்
உதிர மறுக்கிறாள்..

- அரவிந்த் குமார்.பா

கனல் நிலவே




கனல் நிலவே - என்
கனவுக்குள் புகுந்து
கலவரமூ ட்டுகிறாய்..

மெதுமெதுவாய் - என்
நினைவுக்குள் புகுந்து
நிலவரம் மாற்றுகிறாய் ..

ஆவியானது
என் உயிர் மொத்தம்..
உன் ஜோதி விழியில்
எத்தனை வெப்பம்..

உன் பாதிப்புன்னகை
கண்டது பிழையா..
இந்தப் பாதிப்புகள்தான்
காதலின் விலையா..

வேண்டுமென்றே
கண் முன்னால் - நீ
நடந்து போகின்றாய்..

உன் விழியின் குழியில்
விழுவேனா வென்று
விரதமி ருக்கின்றாய்..

மறந்தும் கூட
மௌனச் சுவரை
உடைக்க மறுக்கின்றாய்..

உன் பருந்துப்
பார்வைக் கெலி போலென்னை
உணர வைக்கின்றாய்..

அருவியில்
குதிக்கச் சொன்னால்
அடுத்த நொடியில்
குதிப்பேன்..

உன் அருகில்
போய் வரச் சொன்னால்
அய்யோ முடியாமல்
துடிப்பேன்..

உலகம் முழுதும்
எனதென் றாலும்
இல்லையெ னக்கு
மகிழ்ச்சி..

என் கவனம்
குலையாமல்
உன் கண்களைப்
பார்த்தால் - அதுவே
பெரிய புரட்சி..

விழாமல்
உன் விழி
எதிர் கொள்ளப்
பழகிக் கொள்கிறேன்..

உன் கலாப மொழி
அத்தனையும்
கற்றுக் கொள்கிறேன்..

பலாச் சுளை
கன்னங்களை
நினைத்துக் கொள்கிறேன்..

இந்த நிலாப் பெண்ணை
மனைவியாக்க
முயற்சி செய்கிறேன்..

- அரவிந்த் குமார்.பா


Friday, July 30, 2010

என் சிறைவாழ்க்கை..




உண்மையில்
அந்த இரவு
என் வாழ்க்கையின்
கருப்பு தினமாகவே
இருக்கும்..

ஆம்..ஆருயிர் நண்பன்
கொலையுண்டதும்..
அதன் சந்தேகக்
கிரணங்கள்
என் மேல்விழுந்ததும்
அதிர்ச்சி மேல்
அதிர்ச்சியாய்
நடந்தேறியது
நாடக மேடைச் - சித்திரம்
போல..


விசாரணை
வழக்குகளென
ஓடின தினங்கள்
ரணங்களாக..

உண்மை
சொந்தக் குரலில்
கதறும் போது
பொய்
சாட்சிகளின் வாயில்
சத்தியம் பேசியது..

காரணம் புரியவில்லை
என்னை சொந்தங்கள்
அணுகவில்லை..

ஏனென்று தெரியவில்லை
என்னை நண்பர்களும்
நெருங்க வில்லை..

நினைத்துப் பார்த்தேன்..
உண்மையில்
அந்த இரவு
என் வாழ்க்கையின்
கருப்பு தினமாகவே
இருக்கும்..

நம் திருநாட்டில்
வசதி படைத்தவர்களுக்குத் தானே..
வழக்குகளும்
வாய்தாக்களும்..
என் போன்ற
சாமானியர்களுக்கு
தீர்ப்புகளும் தண்டனைகளும்
மட்டும் தானே..

ஆம்..
தீர்ப்பு எழுதப் பட்டது
என் வழக்கின் மேல்..
இல்லை
தீர்ப்-பூத் தூவப்பட்டது
நீதியின்
சமாதி மேல்..

இந்திய தண்டனைச்
சட்டப்படி -
எவனோ இழைத்த
குற்றத்திற்கு
எனக்கு
ஏழாண்டு கடுங்காவல்..

வழிந்தது கண்ணீர்..
இருண்டது உலகம்..
தொலைந்தது வாழ்க்கை..

இடிந்தது
முன்னிரவுகளில்
மனைவியோடு
கற்பனையில் கட்டிய
கனவுக் கோட்டைகள்..

திறந்தது
பார்த்ததும் பயந்தரும்
முன்னறியாத
சிறையின் கதவுகள்..

சீருடைத் தரப்பட்ட
கையோடு - அங்கே
மானுடம் கொல்லப் பட்டது..
விலங்கைப் போல்
நான் உள்ளே
தள்ளப்பட்ட போது..

கடந்த காலம்
நினைத்துக் கலங்கினேன்..

மிடுக்கான உடை..
துடுக்கான நடை..
அடுக்கான ஆங்கிலம்..
இப்போது
ஒரு இடுக்குதான்
எனக்கு இருப்பிடம்..

வேகாத சோறு..
தவளைக் குஞ்சுகள்
மிதக்கும் தண்ணீர்..
கதவேயில்லா -
அறுவறுப்பான -
ஆயுள் முழுதும்
கழுவியே காணாத
கழிவறை..
நூறு பேருக்குப்
பொதுவாய்
ஒரு குளிப்படம்..

இம்மியளவும்
காற்றோ
ஒளியோ வராத
ஆயிரம் கொசுக்களின்
வசிப்பிடமே -
இங்கு எல்லோருக்கும்
புகலிடம்..

அப்பப்பா..
சிறையின் இரவுகள்
நரகம்..
சிறையின் பகல்கள்
பாழும் நரகம்..

தற்கொலையே
சாலச்சிறந்தது
இங்கே
தப்பிப் பிழைப்பதற்கு..

கொடுமையில் கொடுமையாய்
பிழைத்துப் பிழைத்துச்
செத்தேன்..
ஆம்..
இங்கே பிழைத்தல்
சாவினும் கொடுமை..

எப்படியோ..
துயரத்தில் துயரமாய்
இந்த துர்வாழ்வின்
மூன்றாண்டுகள்
முடிந்திருந்த போதுதான்
முதுகில்
தட்டியெழுப்பினாள்
என் மனைவி..

போதும் தூங்கியது
மணி ஆறாகியதென்று..

அய்யகோ..
குற்றமே புரியாமல்
மூன்றாண்டு சிறைவாழ்வை
கனவிலேயே
வாழ்ந்த
அந்த இரவு
என் வாழ்க்கையின்
கருப்பு தினமாகவே
இருக்கும்..

- அரவிந்த் குமார்.பா











Thursday, July 29, 2010

பரிச்சயமில்லாத இரயில் தோழி..




அது சுகமான
இரயில் பயணம்..
என் தோளோடு
உன் சயனம்..

மறுபடி ஒருமுறை
கேட்டாலும்
நிகழாத
ஒரு தருணம்..

உன் கூந்தல்
முடிகள்
ஒன்றிரண்டு
என் மீசையொடு
கை கோர்த்தனவே..

உன் சுரிதார்
சிறகுகள்
நீண்டு வந்து
என் தோள்
தொட்ட ணைத்தனவே..

உன் காற்கொலுசுகள்
சொன்ன
இரகசியங்களை
கைவளை வந்து
காதருகே சொன்னதே..

உன் பாற்கடல்
நெற்றியில்
என்-னைவிரலும்
படகாக
ஆசை கொண்டதே..

பார்த்தேன்
நம் பாதணிகள்
ஓரமாய்
இணையானதை..

உற்றேன்
நம் கைப்பைகள்
உற்சாகமாய்
ஊஞ்சலாடி யதை..

உன்னைத் தொட்டு
வந்த போது
தென்றல் - சுகமாய்த்
தெரிந்ததை..

உன் சவாசம் - என்னைச்
சுட்ட போது
காற்றில் தீப்பற்றிக்
கொண்டதை..

எனக்காகவே
பெண்ணாகியவளா நீ..

என்னைக் - காணவே
இரயிலே றியவளா நீ..

எண்ணிக் கொண்டே
உன்னில் இலயித்தேன்..
என்னை மறந்து
தூங்கித் தொலைத்தேன்..

இரயில் நின்று
செல்வதாய் -
உள்ளுணர்ந்ததால்
இரகசியமாய்
விழித்தேன்..

அய்யோ..
நீ அருகில் லாததால்
உன்னைத் தொலைத்தே- னென்று
துடித்தேன்..

அவசரமாய்
வாசல் நின்று
சந்திப்பெல்லாம்
சளித்தேன்..
உன்னைக்
காணோமென்று
சலித்தேன்..

அதோ
அதிகாலை -
அருகாமை -
நடைமேடை -
வெண்ணாடை -
பறக்கும் கூந்தல் -
நடக்கும் ஏஞ்சல் -
போவது..
நீதானென்று
கணித்தேன்..

நீ
திரும்பிச்
சிரித்தாய் - நான்
சாகாமல்
பிழைத்தேன்...

- அரவிந்த் குமார்.பா











எனை நானே கண்டேன் இன்று..




எனை நானே
கண்டேன் இன்று
தூளியிலே
மழலையாக..

அடடா
என் சந்தோசங்கள்
கண்ணோரம்
துளிகளாக..

இறைவா..
என் வாழ்வில்
இந்நேரம் - இணையில்லா
தருணம்
எந்நாளும்..

உலகத்தின் வசந்தங்கள்
எல்லாமும் - இவன்
உருவத்தில் வந்ததது
போலாகும்..

ஆயுள் முழுவதும்
தவம் செய்தாலும்
கிடைக்கா
வரமே..

என் ஆவலை
ஆயிரம் மடங்கு
நிறைத்தாய் - என்றாலும்
தகுமே..

உன் பேரழகை
உலக மொழிகளில்
உரைக்கத்தான்
முடியுமா..

இந்தப் பேருலகில்
அழகென்ற
மற்றவையெல்லாம்
ச்சும்மா..

என் வாழ்க்கை
கரிசற்காடு..
நீ வந்தாய்
மழைமுகிலோடு..
இனி
புல்லினங்கள்
செய்யுள்கள் பாடும்
புதிதாய்ப் பூக்கும்
பூக்களோடு..

- அரவிந்த் குமார்.பா

Wednesday, July 28, 2010

உந்தன் காதல் கொள்வதற்கா..



உந்தன் காதல்
கொள்வதற்கா - நான்
காலம் இத்தனை
காத்திருந்தேன்..

உன்னிடத்தில்
தொலைப்பதற்க்கா
என்னிதயம் - குலையாமல்
கட்டி வைத்தேன்..

உன் சிரிப்போடு
கொஞ்சம்
சுடர் - விழியோடு
கொஞ்சம்
தனித் - தமிழோடு
கொஞ்சம்
தனை இழந்தது
நெஞ்சம்..

உன் வாசலைக் கடந்து
நடக்கிற போது
கால்களுக்குப் பதில்
சிறகுணர்ந்தேன்..

என் கோசலை யுன் முகம்
காணா நாளை
என் வாழ்க்கைப் பதிவில்
விலக்கி வைத்தேன்..

கதிரொளியே
காணாத
நிலமது போலிருக்கும்..

முழுமதியாம்
உனது முகம்
காணாத
நாள் முழுமைக்கும்..

இரத்தினமாம்
என் காதல்
சத்தியமாய்
ஜெயித்திருக்கும்..

நித்திலமுன்
கன்னத்தில்
முத்தமிடும்
நாள் கிடைக்கும்..

- அரவிந்த் குமார்.பா




எனக்கு மட்டும் சொல்லிவிடு..




உனதோ எனதோ
எங்கேயடி தொலைந்தது
நமதான காதல்..

என் காதல் மட்டும்
சீனப் பெருஞ்சுவராய்
இன்னமும்..
உனது மட்டும்
எப்படியானது
பெர்லின் சுவராய்..

'உன்னை மறந்தால்
மரணம்தான் எனக்கு ' - என்று
கண் கலங்கிச் சொன்னாயே
ஒரு நாள்..

ஓ..
உதடுகளால்
எழுதியதை
கண்ணீரால்
அழித்துவிட்டாயோ..

உயிரைத்
தொட்டுத் திரும்பும்
சுவாசமெல்லாம்
உன்னையே
நினைத்துக் கொண்டிருக்கிறது
எந்நேரமும்..

என்ன
செய்து கொண்டிருக்கிறாய் நீ
இந்நேரம்..

'உன் கண்கள் பிடிக்கும் -
உன் புன்னகை பிடிக்கும் -
உன் ஆணவம் பிடிக்கும் -
உன் ஆளுமை பிடிக்கும் '
என்பாயே..

எப்படியடி
மறந்தாய்
ஒட்டு மொத்தமாய்
உன்னை மட்டுமே
பிடித்த என்னை..

என் மலர்ந்த
இதயத்தில்
எப்போதும் இருப்பவளே..

நான் கொடுத்த
பூக்களை
வாடிய பின்பும்
பத்திரப்படுத்தி
வைத்திருந்தாயே ..

இப்போது
என்ன செய்தாய்
அவற்றை..

கிடக்கட்டும்
என்று வைத்திருக்கிறாயே..
அல்லது
குப்பைக் கூடைக்கு
அனுப்பி விட்டாயா..

நீ வரும்
கனவில் இருந்து
உன் கையெழுத்து
சிரிக்கும் காகிதம் - வரை
எல்லாவற்றையும்
நினைவகத்தின்
முதலடுக்கிலேயே
செதுக்கி வைத்திருக்கிறேன்..
நான் - நம்
முதல் முத்தத்தைப்
போல..

நம்
முதல் முத்தமேனும்
ஞாபகமிருக்கிறதா
உனக்கு..

உன் பிறந்த நாளன்று
நான் பரிசளித்த
வண்ணத் துப்பட்டாவும்
பட்டாம் பூச்சிக்
கவிதையும்
போதுமே..
மறக்க மறக்க
பறைசாற்றும்
என் காதலை..

எங்கே
ஊமையாக்கி விட்டாயா
அந்த
உன்னத சின்னங்களை..

எல்லாம் சரி
கடவுளே வந்தாலும்
என் காதலை
அழிக்க முடியாது
என்றாயே..

எனக்கு மட்டும்
சொல்லிவிடு..
கடைசியாய்
உன் காதலை
வந்து அழித்தது
எந்தக் கடவுள்
என்று..

- அரவிந்த் குமார்.பா

பார்க்குமிடம் அத்தனையும்




பார்க்குமிடம் அத்தனையும்
பாவை யுந்தன்
பிம்பம் தோன்றுதடி..

பாட்டன் - பாரதி யெழுதிய
பாட்டுக்க ளெல்லாம் - உன்னைப்
பார்த்த பின்தான்
புரிந்ததடி..

ஒரு மொழி இரு விழியால்
என் உயிர் குடித்தாய்..
உலகத்தில் தனியனைப்
போலெனை உணர வைத்தாய்..

நம் நெருக்கத்தை
அதிகரித்தாய்..
தினம் உறக்கத்தில்
உலற வைத்தாய்..

தேகமெங்கும் உதிர மென
உன்னினைப்பே
ஓடுதடி..

காலைப் பனி போல் - என்னை
காதல் பனி
மூடுதடி..

கோவிலுக்குள் ளிருந்தாலும் - உன்
கோல முக
ஞாபகமே..

சாமி தனை மறந்து விட்டு - என்
ஆறறிவும்
சாயுதடி..

சாலையோரப் பெண்களை
ஓரக் கண்ணால் கூடக்
பார்ப்பதில்லை..

பொழுது
சாய்ந்த வேலைகளில்
நண்பர் களோடு
சுற்ற வில்லை..

இருக்கும்
ஒரே தீப் பழக்கம்
இரவு தாமதமாய்
உறக்கம்..

அதற்கும்
காரணமாய்
கனியமுதே - உன்
கவன்வில் கண்களே
இருக்கும்..

- அரவிந்த் குமார்.பா



Tuesday, July 27, 2010

நீ பிரிந்து போனதும்..




நீ
பிரிந்து போனதும்
எனக்கு
கவிதையெ ழுதுவதே
மறந்து போனது..

உன்
சிநேகம் தவிர்த்ததும்
என் தேசத்தில்
மேகம் பொழிவதை
நிறுத்திக் கொண்டது..

நம் பிரிதலை
நீ முன்மொழிகையில்
என் தோட்டத்து
மலர்களெல்லாம்
தற்கொலை
செய்து கொண்டன..

என்
வீடு தேடிவந்து
வண்ணத்துப் பூச்சியொன்று
வருத்தம் தெரிவித்துப்
போனது..

எங்கள்
பாச நாய்க்குட்டி
இந்த
இருதயக் கொலை குறித்து
விசாரணையில் இறங்கவாயென
வினாவியது..

சுடிதார்ப் பெண்களெல்லாம்
இப்போது எனக்கு
உன் வேடம்
தரித்தாற்போல்
தெரிகிறது..
அல்லது
உன் போல
வேடம் தரித்ததாய்த்
தெரிகிறது..

இருந்தாலும்
என் சிந்தனைகள்
உள்வாங்கும்
எல்லா அலைவரிசையிலும்
உன் ஞாபகமே
ஒளிபரப்பாகிறது
இரவும்.. பகலும்..


என்
இருதயக் கோவிலின்
கருவறை
இருட்டடைந்தே கிடக்கிறது..
அதைப் புனரமைக்க
யாரும் வரவில்லை
இன்னமும்..

- அரவிந்த் குமார்.பா

வார்த்தை தெரியவில்லை




வார்த்தை தெரியவில்லை
உன் நளினத்தைப் புகழ..

மலர் - வாசமதை
மொழியா லெப்படி எழுத..

சாரல் தொடங்கையிலே
ஒரு சுகந்தம் பரவுமே - அதைப்
போலி ருமடங்கு
உனது மௌனமே..

உன் மெல்லிய நடைய ழகை
முகில் சொல்லியபடி யலையும்..
அதுபோல்தான் - உன் புன்னகை
கண்ட பூக்களின் நிலையும்..

கடலளவு மலையளவு
பெருஞ் செல்வம் தந்தாலும்
அவை வேண்டாம் - நகமளவு
உன் ஸ்பரிசம் தருவாயா..

விழியழகு மொழியழகு
அதையெ ல்லாம் மிஞ்சி விடும்
உடையில்லா உடல ழகால்
என் தோளில் சாய்வாயா..

என் பிஞ்சுத் தங்கமே..
நான் பெற்ற சிங்கமே..

- அரவிந்த் குமார்.பா

கவித்தவம்

கவித்தவம் செய்தேன்
காதல் வரங்கொடுத்தாள்..

காதல் தவம் செய்தேன்..
கல்யாணப் பத்திரிக்கை
அனுப்பினாள்..

- அரவிந்த் குமார்.பா

என் வாழ்க்கை வளி




உயிரிலே மழையென
ஒரு கோடிப் பூக்கள்..
உன் ஓரவிழிப் பார்வையிலே
உருவான ஆற்றல்..

வெட்கப்பட்டு சிறுநேரம்
வாய் பொத்திச் சிரித்தாய்..
மாநிலமே பயனுற
மின்சாரம் கொடுத்தாய்..

கற்றைக் கூந்தல் அவிழ்த்தாய்
புவியியல் மாற்றம்..
அவசரமாய் தரையிறங்கிய
சூரியனுக்கு ஏமாற்றம்..

என் சிந்தனை
ஒரு கானகம்..
நீ அந்தரத்தில்
வானகம்..
சாரலின் கைகளில்
தீப்பொறி தருகிறாய்..
செய்யாதே
அது பெரும்பாதகம்..

என் நெஞ்சில்
வலி ஆயிரம்..
போகும் வழி
ஓரிடம்..
ஆய்வுகள் செய்து
கண்டறிந்தேன்..
என் வாழ்க்கைக்கான
வளி உன்னிடம்..

- அரவிந்த் குமார்.பா

நெருக்கடி..




அந்தி வானம் போலவள்
கூந்தல் வண்ணம்..
அவள் சிரித்தால் - பூக்கள்
பேராசை கொள்ளும்..

இவள்தான் உன்னவள்
என்றொரு எண்ணம்
என்னை ஆட்டிப் படைக்குது
நாளொரு வண்ணம்..

அவள் கள்ளப் பார்வைகள்
பார்த்த நாள் முதல்
என் உள்ளக் கூட்டிலே
உடைந்த கோடுகள்..

அந்த அல்லல்பாட்டைத்
தொகுக்கும் போது
ஒரு வில்லுப் பாட்டே
கிடைக்கும் போங்கள்..

என் சொந்த மூச்சையும்
சொந்தமாக்கினாள்
கொஞ்சல் வார்த்தையால்
மந்தமாக்கினாள்

இந்த வாக்கிலென்
வாழ்க்கை போனதால்
கொள்கை கோட்பாடுகள்
கந்தலாக்கினாள்..

மந்திர வித்தைகள்
கற்றவள் போலும்
என் எந்திர மனதும்
அவள் கண்டதும்
சுழலும்..

தந்திரம் செய்தேன்
பலிக்கவில்லை - அதனால்
அவள் சுந்தர விழிகளுக்குள்
சுயமாய் சரணடைந்தேன்..

முன்னம் எந்த நாளிலும்
இப்படி
எனக்கு நேர்ந்ததில்லை
தீராத நெருக்கடி..

காதல் சுகமென்று
நினைத்தேன்
அது தப்படி..

அது தீக்குச்சி - தன்
தலைக்கே வைக்கும்
நெருப்படி..

- அரவிந்த் குமார்.பா

தேவரகசியம்

மார்கழிக் குளிரே..
என் மார்கிழித்த மலரே..
மறுத்தா விடுவாய்
என் காதலை..
குறைத்தா விடுவாய்
என் ஆயுளை..

கணந்தோறும்
என் மனம்
கனமாகக் காரணம் - உன்
விழியெனும்
விசம் தூவும் சாதனம்
அந்த விசயத்தை
சொல்கிறேன் - நான்
உன்னிடம்..

என் மூளையென்னும்
ஆலைக்குள்ளே
மூன்று நாட்களாய்
வேலை நிறுத்தம்

முகிழ்ந்த காதலை
மொழியலாமென்றால்
முதிர்ந்த நினைவுகள்
மூச்சை மிரட்டும்..

எந்த வார்த்தை
சொன்னால் - உன்னெஞ்சில்
பூ பூக்கும்..

எந்த நாளில்
வந்தால் - உன் பூவில்
தேன் கிடைக்கும்..

அந்த தேவரகசியம்
தெரிந்தால் போதும்
தெய்வ தரிசனம்
வேண்டாம்..

என் தேவியுன் கரம்
பிடிப்பேனென்றால்
மீதிப் பிறவியும்
வேண்டாம்..

- அரவிந்த் குமார்.பா

நல்வரவு





நீ
என் வீட்டுக்கு வந்தாய்..
வண்டுகளெல்லாம் - என்
வாசல் கதவு
தட்டின..

நீ
அமர்ந்ததும்
Plastic Chair
Platinum
ஆனது போல
பீற்றிக் கொண்டது..

நீ புரட்டிப் பார்த்த
புத்தகங்கள்
இப்போது - எனக்கு
பகவத் கீதை..

உனக்கு
காற்று வீசிய
மின் விசிறிக்கு - இப்போது
நான் விசிறி..

கண்ணாடித் தொட்டி
மீன்களெல்லாம்
உன்னைப் பார்த்து
கண்ணடித்தன..

நீ
ஆற வைத்து
குடித்த காபி
உன்னை
சூடாய் குடித்தது..

நீ
எழுந்து நின்றாய்
எல்லா
Tiles - களும்
என்னை மிதியென்றன..

நீ
நடந்து சென்றாய்
அறைக் கதவின்
திரைச் சீலைகள்
வழி விட்டன..

நீ
பேசினாய்
தோட்டத்துக் குயில்கள்
பாடுவதை
நிறுத்திக்
கொண்டன..

நீ
தொட்டுப் பார்த்த
பொருட்களெல்லாம்
மோட்சம்
பெற்றன..

நீ
தொடமறந்த
மற்றவையெல்லாம்
மூர்ச்சையுற்றன..

நீ
வந்ததால்
கூடத்தில் இருந்த
கடிகாரம் - அது
மணி காட்ட
மறந்தது..

வீட்டுக்குள்
வளர்த்த
அலங்கார ரோஜா - அதன்
அகங்காரம்
தீர்ந்தது..

- அரவிந்த் குமார்.பா



Monday, July 26, 2010

கடவுளின் தேசம்





எங்கெங்கு காணினும்
தண்ணீர்..
இங்கு மேகத்தில் வழியுது
பூவாகப் பன்னீர்..

ஆகாயம் மறைக்கின்ற
மரங்கள் - அவை
ஆதாயம் பார்க்காமல்
அள்ளித்தரும்
கரங்கள்..

ஈரமே காயாத
சாலை - அதைப்
பார்த்தாலே பூக்குது
என்னெஞ்சில்
சோலை..

இயல்பாக
இரண்டு கரை தொட்டு - அந்த
நதி செல்லும் அழகிலே
மலருமுயிர்
மொட்டு..

விதை மண்ணில்
விழுந்தாலே போதும் - அதை
இயற்கையே கவனிக்கும்
நேராது
சேதம்..

நகரத்தில் மாசில்லா
காற்று - நான்
கவனித்தேன்
பொய்யில்லை
நிஜமான கூற்று..

மண்ணையே
காணவில்லை எங்கும் - முழுக்க
புல்லே
மறைத்தெழில் புன்னகை
பொங்கும்..

குனிந்தால் கிணறுகளில்
எட்டும் - தண்ணீரைக்
காய்ச்சினால் போதும்
சர்க்கரையே
கிட்டும்..

அதிசயம் மனிதனின்
கொடுங்கை - பக்கம்
இருந்தாலும்
பச்சையாய் சிரிக்குது
இயற்கை..

எப்போதும் சாரலும்
தப்பாத தூரலும்
கோடையே காணாத
மாநிலம் - ஆம்
அது - எவரையும்
கவிஞராய் மாற்றிவிடும்
கேரளம்..

- அரவிந்த் குமார்.பா


பழைய காதலியின் கடிதம்..






எச்சரிக்கை செய்கின்றேன்
என் கனவுக்குள் வராதே..
எட்டு திசை பூட்டிவிட்டேன் - ஆகவே
என்னைத் தொடராதே..

உன் நச்சரிக்கும் ஞாபகங்களை
காற்றோடு அனுப்பாதே..
நான் விட்டெறிந்த நினைவுகளை
ஒட்டவைக்க நினைக்காதே..

செல்லப் பெயர் சொல்லி - என்னை
இனிமேல் அழைக்காதே..
என்னுள்ளத் துயர் கொல்ல
வழிகளேதும் தேடாதே..

பந்தமென்றும் சொந்தமென்றும்
நம்முள்- ளெதுவும் கிடையாதே..
நடைபாதையிலெனைப் பார்த்தால் கூட
போய்விடு மறுபடி பேசாதே..

புத்துயிர் கொண்டது போல்
எண்ணிக் கொள் கலங்காதே - நீ
வெற்றி கொள்ள பிறந்தவன்
என்பதை மட்டும் மறக்காதே

பச்சரிசிப் புன்னகையை
துளியளவும் குறைக்காதே - நீ
உச்சரிக்கும் கவிதைகளை
ஒருபோதும் நிறுத்தாதே..

இன்னவள் உன்னுள்ளிருந்தாள்
என்பதை நினைக்காதே..
இன்னொருத்தி உன்னிதயம் வெல்வாள்
இன்னுயிரை வருத்தாதே..

எனக்கு மட்டும் உனைப் பிரிய
விருப்பமா கிடையாதே..
மனக்குளத்தில் அமிழ்ந்திருக்கும்
உன்னுருவம் மறையாதே..

சுற்றத்தின் கைகளில் சிக்கிக் கொண்ட
நம் காதல் இனிமேல் பிழைக்காதே..
நான் சுவாசிப்பதைக் கூட நிறுத்திக் கொண்டேன்
வேறெதுவும் என்னைக் கேட்காதே..

- அரவிந்த் குமார்.பா

உன் நினைவில் மூழ்கி






உன் நினைவில் மூழ்கி
நான் முத்தெடுக்கும்
போதெல்லாம்
கடிகாரத்துக்கு மட்டுமல்ல - சமயத்தில்
காலண்டருக்கும் கூட
கால் முளைத்துவிடுகிறது..

உன்னை வர்ணிக்க
நிலவு என்னும்
வார்த்தையை எடுத்தேன் -
பார்
மூன்றாம்பிறை
பௌர்ணமியாகி விட்டது..

உன் தித்திக்கும் ஞாபகத்தில்
திளைத்திருப்பதால்
எனக்கு
சர்க்கரை வியாதி
வந்துவிடுமோ ?
என்று கூட
பயமாயிருக்கிறது..

வானவில்லுக்கும்
உனக்கும்
ஒரேயொரு
வித்தியாசம்
அது - வானத்தில்
இருக்கிறது
என்பது மட்டும்தான்..

கிளி ஜோசியம்
பார்க்கப் போனாய்..
கிளிக்கு ஜோசியம்
சொன்ன கிளி என்று
பிரபலபடுத்திவிட்டாய் - அந்த
பொய்க் கிளியை..

ஒரு மோகப் பொழுதில்
உன் கூந்தல் நுகர்ந்தேன்..
நக்கீரரை நடு நெற்றியில்
சுடத் தோன்றியது..

படிக்கப் படிக்க
அலுக்காத
பைந்தமிழ் கவிதை நீ
சென்ற நூற்றாண்டின்
சிறந்த கவிஞர் விருதை
உன் தந்தைக்குதான்
தர வேண்டும்..

உன் அழகை
ஒரு வரியில்
எழுதச் சொன்னாய்..

மன்னித்து விடு.. முடியாது..
வேண்டுமானால்
மெகா சீரியல்
எடுக்கிறேன்..

உன் மீதான
என் காதலை
எதன் மீதாவது
ஒப்பிடச் சொன்னாய்..

தங்கமே..
தாஜ்மகால் கூட
குடிசை என்றே
நினைக்கிறேன்..

- அரவிந்த் குமார்.பா

Sunday, July 25, 2010

நீ பார்த்ததில்தானடி

நீ பார்த்ததில்தானடி
பைத்தியமானேன்..
உனைப் பார்த்திடத்தானடி
பத்தியமிருந்தேன்..

சிரித்தாயடி
நான் சிக்கிக் கொள்ளவே..
தவித்தேனடி
நான் தப்பிச் செல்லவே..

காதல் வானில் களித்தேன்..
உன் கண்ணில் என்னைத் தொலைத்தேன்..

அங்கேயும் இங்கேயும்
அரைப் பார்வை பார்த்தென்னை
முழுப் பார்வைக் - கிரையாக்கினாய்..

அலுங்காமல் குலுங்காமல்
அதிர்வொன்றும் நிகழாமல்
இதயத்தை இடமாற்றினாய்..

வாளைக்
கையோடு கொண்டே - நீ
போரிட்டால்
வீழ்த்திச் செல்வேனடி..

வளையல் கரத்தோடு
வந்தே - நீ
போரிட்டாய்
வீழ்ந்தே நின்றேனடி..

வெளியே வெளியே
என் உள்ளம் சொல்ல..
வழியேயின்றி
என் வாழ்க்கை செல்ல..
முடிவாய்ச் சொல் பெண்ணே
நான் என் செய்ய..

அதிகாலை வந்தாய் - நீ
அதனாலே கனவுக்கு
பரிவட்டம் தந்தேனடி..

நெடு நாளாய்
உறக்கத்தில் உழன்ற
என் கவிதைக்கு
ஒளிவட்டம் தந்தாயடி..

உன்னைப் பார்க்காத
வரைக்கும் - என்
முகத்திற்கு
சிரிப்பே தெரியாதடி..

உன் கண்கள்
பார்க்காத வரைக்கும் - என்
படைப்பிற்கு
பரிசே கிடையாதடி..

அழகின் அர்த்தம் - உன்
கண்கள் என்பேன்..
கொலையில் புத்தம் - உன்
கொள்கை என்பேன்..
சிறகோடு சிலுவையில்
அறைந்தால் - அதுதான்
காதல் என்பேன்..

- அரவிந்த் குமார். பா

நினைப்பு

மறப்பவர்க்கு
மார்க்கம் இல்லை..
நினைப்பவர்க்கே
நீண்ட பயணம்..

மறத்தல்
வரம் இல்லை..
நினைத்தலே
தவம்..

நினைத்துச் செய்தல்
நின்று பேசப்படும்..
மறந்து செய்தன
எதேச்சை எனப்படும்..

மறந்து செய்பவர்
அரும்பு..
நினைத்துச் செய்பவர்
சுயம்பு..

கொடுத்ததை
மறக்கலாம்..
மறந்து கொடுத்தல்
கூடாது..

வாழ்க்கை ஒரு
நெடுஞ்சாலை..
நினைத்துச் செல்பவர்
இலக்கை அடைவர்..
மறந்து செல்பவர்..
விளக்கைத் தேடுவர்..

நினைத்தல் என்பது
ஞாபகக் குவியலின்
நினைவுப் பொதியல்ல..
தன்னையே நினைத்தல்..

நின்றல்.. நடத்தல்..
குளித்தல்.. களித்தல்..
இசைதல்.. அசைதல்..
என அத்தனையும்
நினைப்பே..
நினைப்போடு செய்தால்
அனைத்தும் வனப்பே..

நினைத்தலின் உச்சம்..
உறக்கத்தில் விழிப்பு..
கொணர்ந்து பார் கிடைக்கும்
வெற்றியின் சிலிர்ப்பு..

- அரவிந்த் குமார்.பா

Friday, July 23, 2010

இழப்பு

உன்னுருவம் பார்த்தா
வந்ததென் காதல்..
இல்லையெந்தன்
கண்மணியே..

உன் பருவம் பார்த்தா
படர்ந்ததென் நேசம்
உண்மையைச் சொல்
என் உள்ளுயிரே..

மெதுவாய் மெதுவாய்
நிறைத்தாய் மனதை..
பின்னால்தானே
உரைத்தேன் கனவை..

உயிராய் உறவாய்
உணர்ந்தேன் உன்னை..
அதனால்தானே
தந்தேன் என்னை..

நட்பில் தொடங்கிய
நம் பந்தம்
காதலானதெப்போது..
எதுவும் எனக்குத்
தெரியாது..

அறிவியல்வாதிகள்
சொல்கின்ற
எதிர் பாலினர்
உணர்கின்ற
வேதியல் மாற்றமும்
கிடையாது..

நீதான்
எனக்குச் சரியென
நினைத்தேன்..
நினைத்ததை
நிகழ்த்த வழிகளை
வகுத்தேன்..

நண்பர்கள் துணை
வேண்டாமென்று
எடுத்தேன்
கவியெழுத
பேனாவொன்று..

நகர்ந்தன நாட்கள்
நரகத்தைப் போல
கனிந்தது காலம்
என் காதலைப் போல..

காதல் உரைத்தேன்
நான் தான் முதலில்
கண்ணியமாய்
மறுத்தாய்
உந்தன் பதிலில்..

அய்யோ அவசரம்
கொண்டேன் என்று
அழுதேன் நானும்
தனியறை சென்று..

நண்பர்கள் கேட்க
நலம்தான் என்று
சொன்னேன் - நா கூசாத
பொயொன்று..

எங்கே எதிலே
தவறிழைத்தேன்
விடுமுறை நாளில்
யோசித்தேன்..

சுத்தமான
என் அன்பில்
குற்றமேதும்
கண்டாளோ..

தோழியரின்
அறிவுரையில்
குழம்பிப்
போய் விட்டாளோ..

குழுங்கிக் குழுங்கி
அழுதேன்
குணக் குன்றே
நம் காதல்
கூடாதது கண்டு..

சிரிப்பு முகமூடி
அணிந்தேன்
சிவந்த கண்களை
மறைத்துக் கொள்ள..

குறிப்பு கண்டு
நொந்தேன்
கொலைக் குற்றம்
செய்தது போல..

என் பால் நெஞ்சம்
புரியாத பாவியவள்..
என் நூல் நெஞ்சை
அறுத்த ஆணியவள்..

என்னை இழந்ததால்
இழப்பு அவளுக்கு..
மழை தள்ளிப் போனால்
இழப்பு மண்ணுக்கு..

- அரவிந்த குமார்.பா

கிளிஞ்சல்கள்

என் எண்ணக் கடலலையில்
மிதந்து வரும் வண்ணக் கிளிஞ்சல்களை
உன் சின்னப் பாதங்களில்
சமர்ப்பிக்கிறேன்..

இன்னும் எழவில்லை
என் இருதயத்தில்
எங்கே உயிர் நாதம்..
உன் பாதக் கொலுசுகளைப்
பாடவிடு கொஞ்சம்..

மின்னல் கீற்றுகளை
சேகரித்து
சேலை நெய்தவளே..
நீ ஜன்னல் மூடியதும்
செத்துவிடும் நெஞ்சம்..

மண்ணைத் தொடவந்த
மழைத்துளிகள்
மரித்துப்போவதில்லை..
உன்னையும் தொடுவேன் - நான்
அது போல ஒரு நாள்..

தண்ணீர் குளிருமென்றால்..
செந்தனல் கொதிக்குமென்றால்..
நீயும் எனதன்றோ மறுக்க-
வொண்ணுமோ உன்னால்...

வெண்ணிலா புகுவதே
விளையாட்டு எனக்கு..
உன்னெஞ்சம் புகுவதா
புரியாத கணக்கு..

- அரவிந்த் குமார்.பா

உன்னை நினைத்து..

உன்னை நினைத்தே உன்னை நினைத்தே
உருளும் என் வாழக்கை..
எந்த தினத்தில் எந்த கணத்தில்
தீரும் இந்த வேட்கை..

சிந்தை முழுதும் உந்தன் உருவம்..
கந்தலானது எந்தன் கருவம்..
இந்த மாற்றங்கள் தந்தவளே
எரியும் நெஞ்சம் எப்போது அணையும்..

சாரலில் நனைகிறேன்
உன் தோளில் சாய்ந்த சுகமில்லை..
உன் தேடலில் திரிவதால்
நிகழ்வதெல்லாம் நினைவிலில்லை..

வானவில் கடக்கிறேன்
உன் துப்பட்டாவின் அழகில்லை..
சுவாசம் மட்டும் என்னிடம்
மிச்சத்தை உன்னிடம் மீட்கவேயில்லை..

நீதான் கண்மணி..
என் கனவுகள் முழுமைக்கும்
நெருப்பு வைத்தாய்..

எரிகிறேன் தினமும்
வாழ்கின்ற வாழ்க்கையை
வெறுக்க வைத்தாய்..

கண்ணீர் தொடாத விழிகளை
நீ உப்புக் கடல் போல்
கரிக்க வைத்தாய்..

மகிழ்ச்சி மறந்த
மனிதன் என்னை
மறுபடி எப்போது சிரிக்க வைப்பாய்..

- அரவிந்த் குமார்.பா

எப்ப வரும் இன்னோரு திருவிழா

கானக் குருவிகளே..
காடக் குஞ்சுகளே..
வானந் தொறந்து வரும்
ஈரத் தூரல்களே..
கண்ணுல நிர் வழிய
நாம்படும் கஸ்டங்கள
கருத்தோட கொஞ்சம்
காதத் தொறந்து கேளுங்களேன்..

நானாப் போன வழி
தானா வந்தவதான்..
மானா மயிலிறகா
யோசிக்க வச்சவதான்..
வேணான்னு சொன்னாலும்
வெளங்காம நின்னவதான்..
வீணால்ல ஏம்மனச
வத்தி கிழிச்சு எரிச்சுப்புட்டா..


தேனாப் பொழிஞ்சான்னு
தெரியாம நம்பிப்புட்டேன்..
போனாப் போகுதுன்னு
பொசக் கழுதைய ஏத்துக்கிட்டேன்..
தூணா இருந்தவன
துரும்பால்ல ஆக்கிப்புட்டா..
வீரனா இருந்தவன
வெறும் பயலா மாத்திப்புட்டா..


வெள்ளம் வந்த ஊரப் போல
சீரழிச்சுப் போயிட்டாளே..
கொல்ல வந்த அம்பப் போல
மாரக் கிழிச்சுப் போயிட்டாளே..


நெலாவுல நடக்கிறதா
கனாவுல மெதந்தாலும்..
வெலாவுல ஓன்னெனப்பு
வின்னுன்னு குத்துதடி..


ரத்தத்துல கலந்துப்புட்ட
மொத்தத்துல நீ இப்ப..
ரோசங்கெட்ட மனசுக்குள்ள
சட்டமா நீ நிக்கெ..

என்னமோ என்ன நீ
ஏமாத்திப் போனாலும்
கொடங்கொடமா அனுபவத்த
ஏந்தலையிலதான் கொட்டிப்புட்ட..

என்னதான் அனுபவத்த
கொடுத்தாலும் போ புள்ள..
ஒன்னயே நம்புன
ஏம்மனசயில்ல வெட்டிப்புட்ட..


வருசம் ரெண்டு கழிஞ்சு
ஓம்மொகத்த நாம்பாத்தேன்..
நா ரசிச்சு காதலிச்ச
அந்த மொகம் காணமடி..


ஓன்னாச மொகத்த
மறுபடி நாம்பாக்க
இன்னோரு திருவிழா
என்னைக்கு விடியுமடி..

- அரவிந்த் குமார்.பா

Thursday, July 15, 2010

காதல் பெருங்கடலே ..




நெஞ்சுக்குள் உறும்
உயிர்த் துளிகள் எல்லாம்
ஓடையாகி , நதியாகி
கடைசியில்
உன்னிடம்தான் ஓடி வரும்
என்
காதல் பெருங்கடலே..

காய்கறி வாங்க
கடைத் தெருவுக்குப்
போவேன்..
கூடை நிறைய
உன் ஞாபகங்களோடுதான்
திரும்பி வருவேன்..

சில இரவுகள்
போர்வையே விரிக்காமல்
உறங்கியிருக்கிறேன்
ஆனால்
உன் பூமுகம் நினைக்காமல்
நான் தூங்கியதில்லையடி
ஒரு நாளும்..

விக்கல் எடுக்கும்
சமயங்களில்
நீ என்னை
நினைப்பதாகவே
நம்பிக் கொண்டிருக்கிறேன்
நான்..

உன்னோடு
நான் கடந்த
ஒவ்வொரு வினாடிகளும்
என் ஓரிரவுத் தூக்கத்தை
வென்றழித்து விடுகிறது..

ஏப்ரல் வெயில் கூட
எதுவும் செய்யவில்லை
என்னை..
உன்
தீக்கனல் பார்வை
நினைத்தாலே
என் தேகம் சுடுகிறது..

உன் சிரிப்புகள்
என் கவிதையாகும்..
உன் கோபங்கள்
என் கவலையாகும்..
ஆற்றல் அழிவின்மைக்
கோட்பாட்டையே
நான்
உன்னிடம்தானடி
கற்றுக் கொண்டேன் ..


புலன்கள் ஐந்தும்
போதவில்லை எனக்கு..
பொக்கிசமே..
உன் நினைவில்
ஜீவன் சேர்ப்பதற்கு..


- அரவிந்த் குமார். பா

ஊடல் ..




உயிரே நீயென உணருகிறேன்
உன் நினைவால் இதயம் சிதறுகிறேன் ..

உன் காதல் கொண்டாடி தீர்த்தவன்
உன் ஊடலால் கண்ணீரைத் தீர்க்கிறேன்..

உன் பனிச் சிரிப்பில் உணர்வு கரைந்தவன்
உன் துளிக் கோபத்தில் உடைகிறேன் உடைகிறேன்..

வானமானவளே..
உன் இரவுச் சோலையிலே
ஒற்றை விண்மீனாய்
நீந்த வேண்டுகிறேன்..

சேனைத் திரட்டி வந்து
உன் ஞாபகம் விழிகளில் இறங்கியது..
ஆணை பிறப்பிக்கிறேன்
என் ஐம்புலனும் அசைய மறுக்கிறது..

யானைப் படை மூலம்
உன்னை வீழ்த்த வழி வகுத்தேன்..
மானைக் கொல்லோம் என - அவை
என் ஊனைச் சிதைக்குதடி..

இனியவளே எனைத் தனியனாய் ஆக்கிவிட்டாய்..
இதயத்தில் புகுந்து உனதென்று மாற்றி விட்டாய்..

சோகம் எதுவுமில்லை
என் சொந்தமனவளே..
உன்னைத் தவிர
நான் யாரிடம் தோற்கப்போகிறேன்..

- அரவிந்த் குமார்.பா

Wednesday, July 14, 2010

அன்புள்ள தந்தைக்கு

அன்புள்ள தந்தைக்கு
என் தமிழ் அத்தனையும்
அர்ப்பணம் உங்களுக்கு...

இன்றளவும்
என் இரத்தத்தோடு
நீங்கள் ஊட்டி வளர்த்த
வீரமும், வலிமையையும்
கர்வமும், கவிதையும்...

அன்புக்கு மட்டுமே
அடிபணிகிறேன்
உங்களைப் போலவே
நானும்...

அச்சம் என்பதை
நான் அறியாமலேயே
வளர்ந்ததற்கு
அன்புத் தந்தையே
நீங்கள்தானே காரணம்...

அப்பா..
உங்கள் அறிவுரையின்
ஞாபகங்களோடுதான்
ஆரம்பமாகின்றன
என் செயல்கள் ஒவ்வொன்றும்...

வெற்றிகளுக்கு மயங்காமலும்
தோல்விகளுக்கு கலங்காமலும்
நான் இருப்பதெல்லாம்
உங்களை நினைப்பதால்தான் அப்பா ...

என் இலட்சியமும் சிந்தனைகளும்
எரிந்து கொண்டே இருக்கும்
அணையாமல் ...
அது -
எனக்குள் நீங்கள்
வைத்த நெருப்பு ..
நான்
உங்களுக்கு வைத்ததைப் போல ...

- அரவிந்த் குமார் . பா