Thursday, July 15, 2010

காதல் பெருங்கடலே ..




நெஞ்சுக்குள் உறும்
உயிர்த் துளிகள் எல்லாம்
ஓடையாகி , நதியாகி
கடைசியில்
உன்னிடம்தான் ஓடி வரும்
என்
காதல் பெருங்கடலே..

காய்கறி வாங்க
கடைத் தெருவுக்குப்
போவேன்..
கூடை நிறைய
உன் ஞாபகங்களோடுதான்
திரும்பி வருவேன்..

சில இரவுகள்
போர்வையே விரிக்காமல்
உறங்கியிருக்கிறேன்
ஆனால்
உன் பூமுகம் நினைக்காமல்
நான் தூங்கியதில்லையடி
ஒரு நாளும்..

விக்கல் எடுக்கும்
சமயங்களில்
நீ என்னை
நினைப்பதாகவே
நம்பிக் கொண்டிருக்கிறேன்
நான்..

உன்னோடு
நான் கடந்த
ஒவ்வொரு வினாடிகளும்
என் ஓரிரவுத் தூக்கத்தை
வென்றழித்து விடுகிறது..

ஏப்ரல் வெயில் கூட
எதுவும் செய்யவில்லை
என்னை..
உன்
தீக்கனல் பார்வை
நினைத்தாலே
என் தேகம் சுடுகிறது..

உன் சிரிப்புகள்
என் கவிதையாகும்..
உன் கோபங்கள்
என் கவலையாகும்..
ஆற்றல் அழிவின்மைக்
கோட்பாட்டையே
நான்
உன்னிடம்தானடி
கற்றுக் கொண்டேன் ..


புலன்கள் ஐந்தும்
போதவில்லை எனக்கு..
பொக்கிசமே..
உன் நினைவில்
ஜீவன் சேர்ப்பதற்கு..


- அரவிந்த் குமார். பா