Monday, July 26, 2010

பழைய காதலியின் கடிதம்..






எச்சரிக்கை செய்கின்றேன்
என் கனவுக்குள் வராதே..
எட்டு திசை பூட்டிவிட்டேன் - ஆகவே
என்னைத் தொடராதே..

உன் நச்சரிக்கும் ஞாபகங்களை
காற்றோடு அனுப்பாதே..
நான் விட்டெறிந்த நினைவுகளை
ஒட்டவைக்க நினைக்காதே..

செல்லப் பெயர் சொல்லி - என்னை
இனிமேல் அழைக்காதே..
என்னுள்ளத் துயர் கொல்ல
வழிகளேதும் தேடாதே..

பந்தமென்றும் சொந்தமென்றும்
நம்முள்- ளெதுவும் கிடையாதே..
நடைபாதையிலெனைப் பார்த்தால் கூட
போய்விடு மறுபடி பேசாதே..

புத்துயிர் கொண்டது போல்
எண்ணிக் கொள் கலங்காதே - நீ
வெற்றி கொள்ள பிறந்தவன்
என்பதை மட்டும் மறக்காதே

பச்சரிசிப் புன்னகையை
துளியளவும் குறைக்காதே - நீ
உச்சரிக்கும் கவிதைகளை
ஒருபோதும் நிறுத்தாதே..

இன்னவள் உன்னுள்ளிருந்தாள்
என்பதை நினைக்காதே..
இன்னொருத்தி உன்னிதயம் வெல்வாள்
இன்னுயிரை வருத்தாதே..

எனக்கு மட்டும் உனைப் பிரிய
விருப்பமா கிடையாதே..
மனக்குளத்தில் அமிழ்ந்திருக்கும்
உன்னுருவம் மறையாதே..

சுற்றத்தின் கைகளில் சிக்கிக் கொண்ட
நம் காதல் இனிமேல் பிழைக்காதே..
நான் சுவாசிப்பதைக் கூட நிறுத்திக் கொண்டேன்
வேறெதுவும் என்னைக் கேட்காதே..

- அரவிந்த் குமார்.பா

No comments:

Post a Comment