Wednesday, July 14, 2010

அன்புள்ள தந்தைக்கு

அன்புள்ள தந்தைக்கு
என் தமிழ் அத்தனையும்
அர்ப்பணம் உங்களுக்கு...

இன்றளவும்
என் இரத்தத்தோடு
நீங்கள் ஊட்டி வளர்த்த
வீரமும், வலிமையையும்
கர்வமும், கவிதையும்...

அன்புக்கு மட்டுமே
அடிபணிகிறேன்
உங்களைப் போலவே
நானும்...

அச்சம் என்பதை
நான் அறியாமலேயே
வளர்ந்ததற்கு
அன்புத் தந்தையே
நீங்கள்தானே காரணம்...

அப்பா..
உங்கள் அறிவுரையின்
ஞாபகங்களோடுதான்
ஆரம்பமாகின்றன
என் செயல்கள் ஒவ்வொன்றும்...

வெற்றிகளுக்கு மயங்காமலும்
தோல்விகளுக்கு கலங்காமலும்
நான் இருப்பதெல்லாம்
உங்களை நினைப்பதால்தான் அப்பா ...

என் இலட்சியமும் சிந்தனைகளும்
எரிந்து கொண்டே இருக்கும்
அணையாமல் ...
அது -
எனக்குள் நீங்கள்
வைத்த நெருப்பு ..
நான்
உங்களுக்கு வைத்ததைப் போல ...

- அரவிந்த் குமார் . பா